முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Sunday, October 21, 2012

பகீரதத் தமிழ்த் தொண்டு


முனைவர் வா. செ. குழந்தைசாமி

          மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்களை நீண்ட  நாட்களாக அறிவேன். எனினும் நெருக்கமாக அறிந்தவன் அல்லன். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்தில் படித்துத் தமிழிலும் அறிவியல் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். அமைதியானவராகவும் ஈழத் தமிழர்களின் ஆய்ந்து அவிந்த பிரதிநிதியாகவும் பேச்சிலும், நடை உடை பாவனைகளிலும் கண்ணியமே உருப்பெற்று காட்சியளிப்பவர்.

          கல்வியறிவு தேடுதல் தொடர்பான பணிகளில் ஆழ்ந்த பற்றுடையவர். 70 தாண்டிய இந்த வயதிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக ஆய்வு செய்துகொண்டிருக்கிறார் என்பதே அவருடைய கல்வியறிவுத் தாகத்தை விளக்கும். பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடல் தொழில் துறையில் ஆய்வு அலுவலராகவும் பணிபுரிந்தவர். 23 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் சார்பில் உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகப் பணிபுரிந்தவர்.

          அவருடைய காந்தளகம் பதிப்பகம் சிறப்பானது. சேர்த்து வைக்க வேண்டிய நூல்களை வெளியிடுவது. இணையத் தளத்தில் 50 ஆயிரத்திற்கு மேலான தலைப்புகளைத் தரும் வளம் நிறைந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய பாரம்பரியத்தில் வந்த மறவன்புலவு அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லைகள் கடந்து, பூமிப் பந்திடை உள்ள நாடுகள் பலவினும் பரவி, புவனமும் தமிழருக்குப் பொது என்ற தத்துவத்தோடு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கட்கு, அவர்கள் பண்பாட்டோடு, இலக்கியத்தோடு தொடர்பு கொண்டு வாழும் வகையில் அவருடைய காந்தளகம் நிறுவனம் துணை செய்கிறது.

     பதிப்பிற்கும் தமிழ் மொழி ஈடுபாட்டிற்கும் பல பரிசுகளைப் பெற்றவர். தருமை ஆதீனத்தின் 18,750 பக்கங்கள் கொண்ட பன்னிரு திருமுறைத் தொகுதிகளை மூலமும் உரையுமாக 16 தொகுதிகளில் அச்சிடும் நிலைக்குத் தயாரித்தது அவரது பகீரதத் தமிழ்த் தொண்டு முயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

     தமிழின், தமிழரின் தற்கால, எதிர்கால உயர்வுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். யாழ்பாணத் தமிழர்களின் போர் 20-21ஆவது நூற்றாண்டுகளில் நடந்து எதிர் விளைவோடு முடிந்த குருட்சேத்திரம். பாண்டவர்கள் பக்கத்தில் பீமனின் கதாயுதம் இருந்தது. அர்ஜூனனின் அம்பும் வில்லும் இருந்தன. தருமனின் நியாயமும் இருந்தது. ஆனால் கிருஷ்ணனின் தந்திரம் இல்லை. எனவே அது தற்காலிகமாகத் தோல்வி கண்டுள்ளது. கட்டுண்டார்கள் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. தாமதித்தாலும் தருமம் வெல்லும் என்பதில் அசையாத நம்பிக்கையுடையவன் நான். நண்பர் மறவன்புலவு அவர்கட்குப் பல்லாண்டு பல்லாண்டு கூறும் இந்த நேரத்தில் தம்மையே நம்பித் தலைநிமிர்ந்த தமிழினம் பெற வேண்டிய உரிமையையும் உயர்வையும் இன்றில்லை எனினும் நாளை பெறும் எனும் நம்பிக்கையோடு மறவன்புலவு அவர்கட்கு வாழ்த்துச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Wednesday, August 29, 2012

தலைமுறை போற்றும்!


சிவநாதன் இரமேசர், கோட்டைக் கினபாலு, சபா மாநிலம், மலேசியா

திருமுறை  இன்பம்  திரைகடல் தாண்டும்
கருவரை  சொல்லும் கனகம் -  வரும்நம்
தலைமுறை  போற்றும் தமிழ்மறை வாழ்த்தும்
இலைமறை  சச்சிபணி  ஏற்று.

Friday, May 18, 2012

அரசியல் கொள்கையாளர் வன்னியசிங்கம்


அன்பு, அறம், மனித நேயம், இரக்கம் சார்ந்த அரசியல் கொள்கையாளர்
மறவன்புலவு . சச்சிதானந்தன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் மாணவன். கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள சாலையின் பெயர் கல்லூரிச் சாலை. நீராவியடிப் பிள்ளையார் கோயில் வரை நீண்ட சாலை. நீராவியடிக் கேணிக்கு முன்பாக வழக்குரைஞர் அருளம்பலவனார் இல்லம். அந்த இல்லத்துக்கு அடுத்த இல்லத்தில் என் வகுப்புத் தோழன் குமாரலிங்கம் வாழ்ந்த வீடு.
குமாரலிங்கத்தின் வீட்டு வாயியில் போர்டு மகிழுந்து ஒன்று மாலை வேளைகளில் நிற்கும். நெடிதுயர்ந்த மனிதர், பக்க வகிடுடன் நிறைந்த கருமுடியை அழகாகக் கோதி விட்டிருப்பார், வெள்ளை வெளேரென வேட்டியும் மெய்ப்பையுமாக இருப்பவர் அந்த மகிழுந்தின் சொந்தக்காரர். சுறுசுறுப்பாக இறங்குவார், வீட்டுக்குள் போவார், வருவார். அவர் குமாரலிங்கத்திற்குத் தாய் மாமன்.
திரு. வன்னியசிங்கம் அவர்களை என் 12ஆவது வயதில் அவ்வாறுதான் அறியத் தொடங்கினேன். அவரைப் பற்றிய செய்திகள் வீரகேசரியில் வெளியாகும். குமாரலிங்கத்துடன் பகிர்ந்து கொள்வேன். நாள்தோறும் வீரகேசரி நாளிதழைப் படிக்க என் தந்தையார் கற்றுக் கொடுத்தார்.
****
 சாவகச்சேரித் தொகுதியில் தமிழரசுக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மறவன்புலவு மக்களிடையே பரப்புரைக்காக என் தந்தையாரை அழைத்துச் செல்ல வரும் அன்பர்களுக்கு வீட்டில் விருந்தோம்பியதையும் திரு. வன்னியசிங்கம் ஒருமுறை அங்கு வந்திருந்தையும் பார்த்திருக்கிறேன். அக்காலம் வரை, திரு. குமாரசாமி அவர்களுக்காகப் பரப்புரை செய்துவந்த என் தந்தையார், 1956 தேர்தலில் திரு. . . நவரத்தினம் அவர்களுக்காககப் பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தலில் திரு. . . நவரத்தினம் அவர்கள் வெற்றிபெற்றார்.
****
 மறவன்புலவில் இளையப்பா உபாத்தியாயர் வீட்டில் அன்பர்கள் கூடினார்களென்றும் 1956 யூன் 5இல் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறவுள்ள மறியலுக்குப் போகிறார்கள் என்றும் வயல் வரப்பில் நிலவொளியில் வைகாசி மாதச் சோழகக் காற்றின் மென்மையை உள்வாங்கியவாறு கணேச சர்மாவும் தம்பு அண்ணரும் கதைத்துக் கொண்டிருந்த பொழுது 15 வயதுப் பையனாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.    
திரு. வன்னியசிங்கம் மற்றும் ஒன்றுபட்ட தமிழ்த் தலைவர்கள் காலிமுகத் திடலில் கடுமையாகத் தாக்கப்பட்டார் என்ற செய்தியைப் படித்தேன். மறவன்புலவில் இருந்து சென்ற அன்பர்கள் மறியலில் ஏற்பட்ட காயங்களுடன் திரும்பியதையும் கண்ணால் பார்த்தேன்.
****
 அன்பு, அறம், இரக்கம் ஆகிய மூன்றும் புத்தரின் வழிகாட்டல். ஆனால் புத்தரைப் பின்பற்றிய அநாகரிக தருமபாலர், முகமதியர்களுக்கு எதிராகக் கொட்டிய கடுஞ்சொற்களே, 1915இல் முகமதியர்களுக்கு எதிராகப் புத்தர்களான சிங்கள மக்களே வன்செயலில் ஈடுபடவும் கலவரத்தில் பலரைத் தாக்கவும் காரணமாக இருந்தன.
அதே வேகத்தில் 1937, 1938களில் மலையாளிகளுக்கு எதிரான வன்முறையைப் புத்தர்களான சிங்கள மக்களே கொழும்பில் தூண்டினர். மலையாளிகளுக்கு எதிரான இயக்கத்தைத் திரு. . . குணசிங்கா வழிநடத்தினார். 1939இல் கேரளத்தில் இருந்து சிங்களவருடன் சமாதானம் பேச வந்த பொதுவுடைமைத் தோழர் திரு. . கே. கோபாலன் உரையாற்றிய வெள்ளவத்தைக் கூட்டத்தைக் கலைத்தனர்.
1928 தொடக்கம் மலையகத் தமிழருக்கு எதிரான போராட்டத்தைத் திரு. தொன் இசுரீபன் சேனநாயக்கா வழிநடத்தினார். 1948இல் பிரித்தானியர் வெளியேறியதும் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்தெடுக்கும் சட்டங்களை நாட்டின் தலைமை அமைச்சராக அவரே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவித்தார்.
இலங்கைத் தீவில் சிங்கள புத்தர்கள் தவிர வேறு எந்த இனத்தவருக்கும் இடம் இல்லை என்ற சிங்கள மக்களின் தொடர்ச்சியான உளப்பாங்கின் வெளிப்பாடாக இந்தச் சட்டங்களைக் கருதிய தமிழ்த் தலைவர்களுள் திரு. கு. வன்னியசிங்கம் ஒருவர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்த, காங்கேயன்துறை நாடாளுமன்ற உருப்பினர் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம், கோப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. வன்னியசிங்கம், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவபாலன், மேலவை உறுப்பினர் மருத்துவர் . எம். வீ. நாகநாதன் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறினர். அவர்களுடன் கட்சியின் செயலாளர் மருத்துவர் வி. கே. பரமநாயகமும் சேர்ந்து கொண்டார்.
முகமதியர், மலையாளிகள், கிறித்தவர், மலையகத் தமிழர் என வரிசையாக, வரலாறாக, இனவொழிப்புக் கொள்கையையும் வன்முறையையும் கலந்த அறத்துக்குப் புறம்பான கண்ணோட்டத்தைச் சிங்கள புத்தர் கொண்டிருந்ததை உணர்ந்த தமிழர் தலைவர்களுள் மூத்தவர்களுள் ஒருவராகத் திரு. கு. வன்னியசிங்கம் இருந்தார். சிங்கள புத்தரின் இனவொழிப்புக் கொள்கையானது வெறுப்பை வளர்க்கும், வன்முறையை ஊக்குவிக்கும், மனித நேயத்தை மூழ்கடிக்கும் என்பதை உணர்ந்தவர் திரு. கு. வன்னியசிங்கம்.
****
முகமதியர்களுக்கு எதிரான சிங்கள புத்தரின் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு சிங்களத் தலைவர்களைச் சிறையிட்டது. சிங்களவரைச் சிறையில் இருந்து மீட்க, இரண்டாம் உலகப் போர்க் கொடுமைகளுக்கு நடுவேயும் இலண்டன் சென்ற திரு. பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்குச் சிங்கள புத்தரின் உள்நோக்கம் புரியவில்லை. அக்காலத்தில் தமிழ்ப் பேசும் முகமதியர்களின் கோபத்துக்கும் திரு. பொன்னம்பலம் இராமநாதன் ஆளானார்.
பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை கேட்ட இலங்கைத் தேசியக் காங்கிரஸ் நிறுவனர் தலைவர் பொன்னம்பலம் அருணாசலத்துக்குச் சிங்கள புத்தரின் இனவொழிப்பு உள்நோக்கம் புரியவில்லை. சில ஆண்டுகளின் பின் அவரைத் தலைமைப் பதவியிலிருந்து சிங்களவர் விடுவித்தபொழுதே ஓரளவு உணர்ந்தார்.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என முழங்கி, தமிழ் மக்களின் உணர்வு வேகத்தில் 1947 தேர்தலில் வாக்குகளைப் பெற்ற அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸ் தலைவர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம், மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்க 1948இன் முதலாவது சட்ட மூலத்துக்கு எதிராகவே வாக்களித்தார். பின்னர் சிங்களவரின் வலைக்குள் வீழ்ந்து 1949இன் இலங்கைக் குடியுரிமை தொடர்பான துணைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். சிங்கள புத்த மேலாதிக்க உள்நோக்கத்தை திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் புரிந்து கொள்ளவில்லை. உடன்பிறப்புகளான மலையகத் தமிழரின் சினத்துக்கு ஆளானார்.
திரு. சி. சுந்தரலிங்கம், திரு. சிற்றம்பலம் போன்ற தமிழ்த் தலைவர்களும் திரு. சேனநாயக்கா அரசுக்கு ஆதரவாக இருந்தனர். சிங்கள புத்த மேலாதிக்க உள்நோக்கத்தை திரு. சி. சுந்தரலிங்கம், திரு. சிற்றம்பலம் ஆகியோரும் புரிந்து கொள்ளவில்லை. மலையகத் தமிழரின் வெறுப்புக்குள்ளான தமிழ்த் தலைவர்களுள் இவர்களும் அடங்குவர்.
சிங்கள புத்தரின் இனவொழிப்புக் கண்ணோட்டத்தைப் புரிந்து கொண்ட தமிழ்த் தலைவர்கள் 1949இல் மாவிட்டபுரத்தில் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். அந்த முயற்சியில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் திரு. கு. வன்னியசிங்கம்.
1949 திசம்பர் 15ஆம் நாள் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் நிறைவற்றியதீர்மானம் பினவரும் கருத்துகளை உள்ளடக்கியது.
சிங்களவர் நிலப்பகுதியில் சிங்கள ஆட்சி, தமிழர் நிலப்பகுதியில் தமிழர் ஆட்சி, இரு அரசுகளும் இணைந்த நடுவண் அரசாகக் கூட்டாட்சி. இலங்கையின் இரு மொழிவழி இனங்களும் ஒரே நாடாக வாழ்வதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு இது.
இந்தக் கூட்டாட்சி ஏற்பாட்டுக்குச் சிங்களவர் ஒத்துழைக்காவிடில், சிங்களவருக்கும் தமிழருக்கும் தனித்தனி நாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது.
இவ்வாறான தொலைநோக்குக் கொள்கையை, அன்பு, அறம், மனித நேயம், இரக்கம் சார்ந்த அரசியல் கொள்கையை விட்டுச் சென்றவர் திரு. கு. வன்னியசிங்கம். 400 ஆண்டு கால அடிமை வாழ்வுக்கு விடிவு காண விரும்பிய தமிழர் திரு. கு. வன்னியசிங்கம். சிங்கள புத்த மக்களுடன் சமாதானமாக வாழ விரும்பியவர் திரு. கு. வன்னியசிங்கம்.
முகமதியர், கிறித்தவர், மலையகத்தார், வன்னியார், மட்டக்களப்பார், யாழ்ப்பாணத்தார் என அனைவரையும் தமிழ்ப்பேசும் மக்களாகக் கண்டவர் திரு. கு. வன்னியசிங்கம். வட்டாரப் பகைமைகளைப் போக்கி, இனப் பகைமைகளைப் போக்கி, மனித நேயத்தை வளர்த்து, மனித நாகரிக வளர்ச்சிக்கான நெஞ்சார்ந்த விழைவுகளுடன் வாழ்ந்த திரு. கு. வன்னிசிங்கம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.