முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Tuesday, April 9, 2013

கோவை மகேசன்


கோவை மகேசன்
மறவன்புலவு. . சச்சிதானந்தன்
          1992 ஜுலை 4 சனிக்கிழமை காலை 7.48 மணிக்குச் சென்னை மந்தவெளி, பி.எஸ் எஸ் மருத்துவமனையில் கோவை மகேசன் இறைவனடி சேர்ந்தார். அவரின் உயிர் பிரியும்பொழுது அவரின் மனைவி மட்டுமே மருத்துவமனையில் இருந்தார்.
அன்று மாலை 4 மணிக்கு ஊரூர் (அடையாறு) மயானத்தில் அவர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
          மரணச் செய்தி அறிந்ததும் முதலில் மருத்துவமனைக்கு வந்து ஆறுதல் கூறியவர் முனைவர் சாலினி இளந்திரையன் அம்மையார் ஆவர். பின்னர் திருகோணமலைக் குகதாசன், நான் எனது மனைவி ஆகியோர் சென்றோம். தொடர்ந்து திரு. நெடுமாறன் அவர்களும் அவரது கட்சித் தொண்டர்களும் வந்தனர். பொறியியலாளர் திரு. கணேசலிங்கம் அவர்கள் அடுத்து வந்தார்கள். 11 மணிக்கு அவரது பூதவுடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
          முனைவர் அரு. கோபாலன், திரு. இரா. பத்மநாதன், முன்னாள் பா. உ. திரு. இரா. சம்பந்தன், மூதூர் அன்பர், திரு. இரட்ணசிங்கம், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், டாக்டர் விசாகரத்தினம், திரு. ஈழவேந்தன் தம்பதியர், திரு. ரொனி, (மறைந்த வீரர் விக்டரின் அண்ணன்) மனைவி பிள்ளைகள், கல்லூரி மாணவி செல்வி. சைலஜா ஆகியோர் வீட்டிலும் மயானத்திலும் அஞ்சலி செலுத்தினர். அறிஞர், கவிஞர் பெருஞ்சித்திரனாரும், கவிஞர் இறைக்குமரனாரும் மயானத்திற்கு நேரடியாக வந்திருந்தனர்.
          திருமதி கோவை மகேசன் சிதைக்கு தீ மூட்டினார். அவருக்கு துணையாகத் திருமதி சச்சிதானந்தன், திருமதி ஈழவேந்தன் இருவரும் மயானத்திற்கு வந்திருந்தனர். கவிஞர் காசி ஆனந்தன் சென்னையில் இருந்தும் அவருக்குத் தகவல் அனுப்ப முடியவில்லை. அண்மையில் அவர் புதிய வீட்டிற்கு குடிபோயுள்ளார்.
          வீட்டிலும் மயானத்திலும் தேவாரம், திருவாசகம், திருமுறை என்பன படிக்கப்பட்டன. உரிய இறுதி அஞ்சலிகள் செவ்வனே செய்யப்பட்டன.
          மயானத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் திரு. நெடுமாறன், திரு. பெருஞ்சித்திரனார், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், முனைவர் அரு. கோபாலன், திரு. இரா. பத்மநாதன், திரு. ஈழவேந்தன். திரு. க.சச்சிதானந்தன், திரு. க. கணேசலிங்கன், திரு. ச. குகதாசன் ஆகியோர் உரையாற்றினர். திரு. கோவை மகேசன் கொண்டிருந்த உறுதியான கொள்கை நிலைப்பாட்டைத் தொடர்ந்து பேணி தமிழீழ விடுதலைக்காக போராடுவதே அவருக்குச் செய்யவேண்டிய நினைவுக்கடன் என்பதைப் பலர் வலியுறுத்திப் பேசினர்.
          மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மயானத்தில் அவரது சாம்பல் மூன்று குடங்களில் எடுத்து வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. தமிழீழ மண்ணிற்குத் தனது சாம்பல் கொண்டு செல்லப்பட வேண்டும் எனக் கோவை மகேசன் விரும்பியிருந்தார். ஒரு பகுதி அங்கு எடுத்துச் செல்லப்படும்.
நோய்
          கோவை மகேசன் கடந்த சில ஆண்டுகளாகவே நோய் வாய்ப்பட்டிருந்தார். 1983இல் வெலிக்கடைச் சிறையில் அவர் பட்ட துன்பங்கள் அவரது உள்ளத்தை உலுக்கிவிட்டிருந்தன. அவரது கண் முன்னேயே டாக்டர் ராஜசுந்தரம் உட்பட பலர் இறந்தனர்.
          அதற்குப் பின் அவர் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இரத்த அழுத்தம், முடக்குவாதம், நீரிழிவு ஆகிய உபாதைகளால் அவதிப்பட்டார்.
          1986இல் நான் சென்னை வந்த உடன் அவரைச் சென்று சந்தித்தேன். நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கணவனும், மனைவியும் என்னிடம் கேட்டனர்.
          சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த மருத்துவர் ஜே. ஆர். சங்கரன் அவர்களிடம் அழைத்துச் சென்றேன். அறிமுகப்படுத்தினேன். கணவன் மனைவி இருவருமே அவர் மருத்துவத்தில் நம்பிக்கை வைத்தனர். தொடர்ந்து மருத்துவம் செய்தார். இறுதிவரை மருத்துவர் சங்கரன் கண்காணிப்பில் மகேசன் இருந்தார்.
          எனினும் அடையாரில் தமது வீட்டுக்கு அருகில் மருத்துவர் ஜெயச்சந்திரனிடமும் ஆலோசனைகள் பெற்றார். டாக்டர் மு. வ.வின் மகன் மருத்துவர் நம்பியும் ஆலோசனைகளைக் கூறினார்.
          கடந்த 2 மாதங்களாகக் காய்ச்சல் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. 104 பாகை பரனைட்டில் வெப்பம் வருவதும் போவதுமாக இருந்தது. சலத்தில் நோய்க் கிருமிகள் இருந்தன. கிருமி எதிர்ப்பு அன்டிபயட்டிக் மருந்துகள் ஊசி மூலமும் குளிகைகளாகவும் கொடுக்கப்பட்டன. விலை உயர்ந்த மருந்துகள் பல கொடுக்கப்பட்டன. மாறி மாறி வந்த நோய்க் கிருமிகளின் தாக்கம் அவரை விடவில்லை. மருந்துகள் ஏற்புடையதாகவில்லை.
          கடந்த ஒரு வாரத்துக்கு முன் சலம் போவது தடைப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருந்து கொடுக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன் குழாய் மூலம் சலம் வெளியேற்றப்பட வேண்டிவந்தது.
          வெள்ளிக்கிழமை மாலை, திரு. நெடுமாறன், நான், திரு. ஈழவேந்தன், திரு. கணேசலிங்கம் ஆகியோர் மருத்துவமனை சென்றிருந்தோம். முனைவர் சாலினி இளந்திரையனும் வந்திருந்தார்கள். மயக்கம் வருவதும் போவதுமாக இருந்தது. எனினும் சில சொற்கள் பேசினார்.
          அன்றிரவு மருத்துவர் நம்பி, மருத்துவர் சங்கரன் ஆகியோர்களிடம் பேசினோம். மருந்துகள் வேலை செய்ய மறுக்கின்றன. கிருமிகள் நோயை வலுவாக்குகின்றன என்றனர். அதுவே அவரது இறுதி நோயாயிற்று.
வாழ்க்கை
          கோப்பாய் இரத்தின சபாபதிக்குருக்களின் மகன் மகேஸ்வரசர்மா, 54 ஆண்டுகட்கு முன் பிறந்தவர்; மகேஸ்வரசர்மா என்ற பெயரை மகேசன் எனவும், கோப்பாயைக் குறிக்க கோவை என்றும் சேர்த்துத் தனது பெயரைக் கோவை மகேசன் என எழுதினார்.
சிறு வயதில் இருந்தே, தமிழ் மக்கள் நலனில் ஆர்வங்கொண்டார். தனது எழுத்தாற்றலையும், கவிதையாக்கும் திறனையும் தமிழர் நல்வாழ்வு நோக்கிப் பயன்படுத்தினார்.
          கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. கு. வன்னியசிங்கம் அவர்களுடன் தொடர்பு கொண்டார். அரசியல் இயக்கங்களில் பங்கு கொண்டார்.
          திரு. வன்னியசிங்கம் மூலமாகக் கொழும்பில் திரு. செல்வநாயகம் நடத்தி வந்த சுதந்திரன் பத்திரிகை அலுவலகத்தில் எழுதுவினைஞராகச் சேர்ந்தார்.
          தான் எழுதிய கவிதைகளைச் சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார். கட்டுரைகள் எழுதி வந்தார்.
1960களில் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். சிறிது காலத்தின் பின் பொறுப்பாசிரியராகப் பதவி ஏற்றார்.
          சுதந்திரன் வார இதழ் மூலம் அவர் தமிழின உரிமைப் போரை நடத்தி வந்தார். தமிழரசுக் கட்சியின் கொள்கை வரம்புகளுக்குள் நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக எழுதினார்; எழுதுவித்தார்.
          எங்கும் தமிழ், எதிலுந் தமிழ் என்ற பாரதிதாசனின் கருத்துக்கு உருவங் கொடுக்க, எல்லாம் தமிழியக்கம் நடத்தப்பட்ட பொழுது இவரும் அதில் இணைந்து பணிபுரிந்தார். சுதந்திரன் பத்திரிகை மூலம் தமிழ்மொழிப் பரவலாக்கலை உறுதி செய்தார்.
          பல இலக்கிய கர்த்தாக்களை ஊக்குவித்தார். மரபுவழி இலக்கியப் படைப்புக்களை ஆதரித்தார்.
          4ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்களை ஆதரித்தார்.
          தமிழரசுக் கட்சி மேடைகள் தோறும் பேசினார். சிறந்த மேடைப் பேச்சாளராகி இளைஞர் உள்ளங்களில் இடம் பிடித்தார்.
          இவரது பேச்சால் கவரப்பட்ட பல இளைஞர்கள் தம்மை முழுநேரத் தமிழ் இன உரிமை மீட்புப் பணிக்கு அர்ப்பணித்தனர்.
          இன்றுள்ள அரசியல் குழுக்கள் அத்தனையிலும் உள்ள முதல் நிலை, இரண்டாம் நிலைத் தலைவர்கள் இவர் காலத்தில் உருவாக்கப்பட்டவர்களே.
          1977இல் தந்தை செல்வா மறைந்ததும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் அசமந்தப் போக்கும், கொள்கை விலகலும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் மட்டும் செயல்படுவதும் இவருக்குப் பிடிக்கவில்லை என எழுதினார். கூட்டங்களில் பேசினார். பல பாராளுமன்ற உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளங்கண்டு குறைகளைச் சுட்டிக்காட்டி எழுதினார்.
          சுதந்திரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கியதும் அதன் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செயற்பட்டார்.
          பிரபாகரனுக்கும், இவருக்கும் நெருக்கமான அன்பும் பாசப்பிணைப்பும் ஏற்பட்டது. கவிஞர் காசி ஆனந்தன், ஈழவேந்தன், டாக்டர் தர்மலிங்கம் போன்றவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
          தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து விலக்கப்பட்ட பின் தமிழீழ விடுதலை முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவரானார்.
          இந்த அமைப்பு பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒன்றிவிட்டது. பிரபாகரனுக்கும், இவருக்கும் இருந்த அன்பும் பாசப்பிணைப்பும் கொள்கைக் கருத்து ஒற்றுமையும் தொடக்கத்தில் இருந்து அவர் சாகும்வரை மாறாமல் இருந்தது. தனது பாசத்துக்குரிய அண்ணனாக இவரைப் பிரபாகரன் கருதினார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆதரித்து செயற்பட்டனர்.
தமிழீழ விடுதலையை அடைந்துவிட வேண்டும் என்பதில் கோவை மகேசன் உறுதியாக இருந்தார். இதனால் இதே உறுதி கொண்ட என் போன்ற பலருடன் அவர் நட்புத் தொடர்ந்தது.
          வன்முறை வழிகளை நான் எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதில்லை. ஆயுதப் போராட்டத்தின் நன்மை தீமைகளை எனது அறிவிற்கு எட்டியவரை அனைவருடனும் பேசி வந்துள்ளேன்.
          அவ்வாறே கோவை மகேசனுடனும் பேசி வந்துள்ளேன். எமக்குள் கருத்து வேறுபாடு ஒன்றில் மட்டுமே இருந்தது. மற்ற எல்லா விடயங்களிலும் நாம் ஒத்த கருத்து உடையவர்களாகவே இருந்தோம். ஆத்ம நண்பர்களாக இருந்தோம். ஒருவர்க்கு ஒருவர் உதவியாக இருந்தோம்.
          மகத்தான தொண்டரைத் தமிழீழ மக்கள் இழந்து தவிக்கிறார்கள். கோவை மகேசன் தமிழீழ வரலாறுடன் இரண்டறக் கலந்தவர்.
17-23 ஜுலை 1992
ஈழநாடு பாரிஸ் வாரமலர்

Sunday, October 21, 2012

பகீரதத் தமிழ்த் தொண்டு


முனைவர் வா. செ. குழந்தைசாமி

          மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்களை நீண்ட  நாட்களாக அறிவேன். எனினும் நெருக்கமாக அறிந்தவன் அல்லன். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்தில் படித்துத் தமிழிலும் அறிவியல் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். அமைதியானவராகவும் ஈழத் தமிழர்களின் ஆய்ந்து அவிந்த பிரதிநிதியாகவும் பேச்சிலும், நடை உடை பாவனைகளிலும் கண்ணியமே உருப்பெற்று காட்சியளிப்பவர்.

          கல்வியறிவு தேடுதல் தொடர்பான பணிகளில் ஆழ்ந்த பற்றுடையவர். 70 தாண்டிய இந்த வயதிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக ஆய்வு செய்துகொண்டிருக்கிறார் என்பதே அவருடைய கல்வியறிவுத் தாகத்தை விளக்கும். பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடல் தொழில் துறையில் ஆய்வு அலுவலராகவும் பணிபுரிந்தவர். 23 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் சார்பில் உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகப் பணிபுரிந்தவர்.

          அவருடைய காந்தளகம் பதிப்பகம் சிறப்பானது. சேர்த்து வைக்க வேண்டிய நூல்களை வெளியிடுவது. இணையத் தளத்தில் 50 ஆயிரத்திற்கு மேலான தலைப்புகளைத் தரும் வளம் நிறைந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய பாரம்பரியத்தில் வந்த மறவன்புலவு அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லைகள் கடந்து, பூமிப் பந்திடை உள்ள நாடுகள் பலவினும் பரவி, புவனமும் தமிழருக்குப் பொது என்ற தத்துவத்தோடு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கட்கு, அவர்கள் பண்பாட்டோடு, இலக்கியத்தோடு தொடர்பு கொண்டு வாழும் வகையில் அவருடைய காந்தளகம் நிறுவனம் துணை செய்கிறது.

     பதிப்பிற்கும் தமிழ் மொழி ஈடுபாட்டிற்கும் பல பரிசுகளைப் பெற்றவர். தருமை ஆதீனத்தின் 18,750 பக்கங்கள் கொண்ட பன்னிரு திருமுறைத் தொகுதிகளை மூலமும் உரையுமாக 16 தொகுதிகளில் அச்சிடும் நிலைக்குத் தயாரித்தது அவரது பகீரதத் தமிழ்த் தொண்டு முயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

     தமிழின், தமிழரின் தற்கால, எதிர்கால உயர்வுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். யாழ்பாணத் தமிழர்களின் போர் 20-21ஆவது நூற்றாண்டுகளில் நடந்து எதிர் விளைவோடு முடிந்த குருட்சேத்திரம். பாண்டவர்கள் பக்கத்தில் பீமனின் கதாயுதம் இருந்தது. அர்ஜூனனின் அம்பும் வில்லும் இருந்தன. தருமனின் நியாயமும் இருந்தது. ஆனால் கிருஷ்ணனின் தந்திரம் இல்லை. எனவே அது தற்காலிகமாகத் தோல்வி கண்டுள்ளது. கட்டுண்டார்கள் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. தாமதித்தாலும் தருமம் வெல்லும் என்பதில் அசையாத நம்பிக்கையுடையவன் நான். நண்பர் மறவன்புலவு அவர்கட்குப் பல்லாண்டு பல்லாண்டு கூறும் இந்த நேரத்தில் தம்மையே நம்பித் தலைநிமிர்ந்த தமிழினம் பெற வேண்டிய உரிமையையும் உயர்வையும் இன்றில்லை எனினும் நாளை பெறும் எனும் நம்பிக்கையோடு மறவன்புலவு அவர்கட்கு வாழ்த்துச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Wednesday, August 29, 2012

தலைமுறை போற்றும்!


சிவநாதன் இரமேசர், கோட்டைக் கினபாலு, சபா மாநிலம், மலேசியா

திருமுறை  இன்பம்  திரைகடல் தாண்டும்
கருவரை  சொல்லும் கனகம் -  வரும்நம்
தலைமுறை  போற்றும் தமிழ்மறை வாழ்த்தும்
இலைமறை  சச்சிபணி  ஏற்று.

Friday, May 18, 2012

அரசியல் கொள்கையாளர் வன்னியசிங்கம்


அன்பு, அறம், மனித நேயம், இரக்கம் சார்ந்த அரசியல் கொள்கையாளர்
மறவன்புலவு . சச்சிதானந்தன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் மாணவன். கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள சாலையின் பெயர் கல்லூரிச் சாலை. நீராவியடிப் பிள்ளையார் கோயில் வரை நீண்ட சாலை. நீராவியடிக் கேணிக்கு முன்பாக வழக்குரைஞர் அருளம்பலவனார் இல்லம். அந்த இல்லத்துக்கு அடுத்த இல்லத்தில் என் வகுப்புத் தோழன் குமாரலிங்கம் வாழ்ந்த வீடு.
குமாரலிங்கத்தின் வீட்டு வாயியில் போர்டு மகிழுந்து ஒன்று மாலை வேளைகளில் நிற்கும். நெடிதுயர்ந்த மனிதர், பக்க வகிடுடன் நிறைந்த கருமுடியை அழகாகக் கோதி விட்டிருப்பார், வெள்ளை வெளேரென வேட்டியும் மெய்ப்பையுமாக இருப்பவர் அந்த மகிழுந்தின் சொந்தக்காரர். சுறுசுறுப்பாக இறங்குவார், வீட்டுக்குள் போவார், வருவார். அவர் குமாரலிங்கத்திற்குத் தாய் மாமன்.
திரு. வன்னியசிங்கம் அவர்களை என் 12ஆவது வயதில் அவ்வாறுதான் அறியத் தொடங்கினேன். அவரைப் பற்றிய செய்திகள் வீரகேசரியில் வெளியாகும். குமாரலிங்கத்துடன் பகிர்ந்து கொள்வேன். நாள்தோறும் வீரகேசரி நாளிதழைப் படிக்க என் தந்தையார் கற்றுக் கொடுத்தார்.
****
 சாவகச்சேரித் தொகுதியில் தமிழரசுக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மறவன்புலவு மக்களிடையே பரப்புரைக்காக என் தந்தையாரை அழைத்துச் செல்ல வரும் அன்பர்களுக்கு வீட்டில் விருந்தோம்பியதையும் திரு. வன்னியசிங்கம் ஒருமுறை அங்கு வந்திருந்தையும் பார்த்திருக்கிறேன். அக்காலம் வரை, திரு. குமாரசாமி அவர்களுக்காகப் பரப்புரை செய்துவந்த என் தந்தையார், 1956 தேர்தலில் திரு. . . நவரத்தினம் அவர்களுக்காககப் பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தலில் திரு. . . நவரத்தினம் அவர்கள் வெற்றிபெற்றார்.
****
 மறவன்புலவில் இளையப்பா உபாத்தியாயர் வீட்டில் அன்பர்கள் கூடினார்களென்றும் 1956 யூன் 5இல் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறவுள்ள மறியலுக்குப் போகிறார்கள் என்றும் வயல் வரப்பில் நிலவொளியில் வைகாசி மாதச் சோழகக் காற்றின் மென்மையை உள்வாங்கியவாறு கணேச சர்மாவும் தம்பு அண்ணரும் கதைத்துக் கொண்டிருந்த பொழுது 15 வயதுப் பையனாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.    
திரு. வன்னியசிங்கம் மற்றும் ஒன்றுபட்ட தமிழ்த் தலைவர்கள் காலிமுகத் திடலில் கடுமையாகத் தாக்கப்பட்டார் என்ற செய்தியைப் படித்தேன். மறவன்புலவில் இருந்து சென்ற அன்பர்கள் மறியலில் ஏற்பட்ட காயங்களுடன் திரும்பியதையும் கண்ணால் பார்த்தேன்.
****
 அன்பு, அறம், இரக்கம் ஆகிய மூன்றும் புத்தரின் வழிகாட்டல். ஆனால் புத்தரைப் பின்பற்றிய அநாகரிக தருமபாலர், முகமதியர்களுக்கு எதிராகக் கொட்டிய கடுஞ்சொற்களே, 1915இல் முகமதியர்களுக்கு எதிராகப் புத்தர்களான சிங்கள மக்களே வன்செயலில் ஈடுபடவும் கலவரத்தில் பலரைத் தாக்கவும் காரணமாக இருந்தன.
அதே வேகத்தில் 1937, 1938களில் மலையாளிகளுக்கு எதிரான வன்முறையைப் புத்தர்களான சிங்கள மக்களே கொழும்பில் தூண்டினர். மலையாளிகளுக்கு எதிரான இயக்கத்தைத் திரு. . . குணசிங்கா வழிநடத்தினார். 1939இல் கேரளத்தில் இருந்து சிங்களவருடன் சமாதானம் பேச வந்த பொதுவுடைமைத் தோழர் திரு. . கே. கோபாலன் உரையாற்றிய வெள்ளவத்தைக் கூட்டத்தைக் கலைத்தனர்.
1928 தொடக்கம் மலையகத் தமிழருக்கு எதிரான போராட்டத்தைத் திரு. தொன் இசுரீபன் சேனநாயக்கா வழிநடத்தினார். 1948இல் பிரித்தானியர் வெளியேறியதும் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்தெடுக்கும் சட்டங்களை நாட்டின் தலைமை அமைச்சராக அவரே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவித்தார்.
இலங்கைத் தீவில் சிங்கள புத்தர்கள் தவிர வேறு எந்த இனத்தவருக்கும் இடம் இல்லை என்ற சிங்கள மக்களின் தொடர்ச்சியான உளப்பாங்கின் வெளிப்பாடாக இந்தச் சட்டங்களைக் கருதிய தமிழ்த் தலைவர்களுள் திரு. கு. வன்னியசிங்கம் ஒருவர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்த, காங்கேயன்துறை நாடாளுமன்ற உருப்பினர் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம், கோப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. வன்னியசிங்கம், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவபாலன், மேலவை உறுப்பினர் மருத்துவர் . எம். வீ. நாகநாதன் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறினர். அவர்களுடன் கட்சியின் செயலாளர் மருத்துவர் வி. கே. பரமநாயகமும் சேர்ந்து கொண்டார்.
முகமதியர், மலையாளிகள், கிறித்தவர், மலையகத் தமிழர் என வரிசையாக, வரலாறாக, இனவொழிப்புக் கொள்கையையும் வன்முறையையும் கலந்த அறத்துக்குப் புறம்பான கண்ணோட்டத்தைச் சிங்கள புத்தர் கொண்டிருந்ததை உணர்ந்த தமிழர் தலைவர்களுள் மூத்தவர்களுள் ஒருவராகத் திரு. கு. வன்னியசிங்கம் இருந்தார். சிங்கள புத்தரின் இனவொழிப்புக் கொள்கையானது வெறுப்பை வளர்க்கும், வன்முறையை ஊக்குவிக்கும், மனித நேயத்தை மூழ்கடிக்கும் என்பதை உணர்ந்தவர் திரு. கு. வன்னியசிங்கம்.
****
முகமதியர்களுக்கு எதிரான சிங்கள புத்தரின் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு சிங்களத் தலைவர்களைச் சிறையிட்டது. சிங்களவரைச் சிறையில் இருந்து மீட்க, இரண்டாம் உலகப் போர்க் கொடுமைகளுக்கு நடுவேயும் இலண்டன் சென்ற திரு. பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்குச் சிங்கள புத்தரின் உள்நோக்கம் புரியவில்லை. அக்காலத்தில் தமிழ்ப் பேசும் முகமதியர்களின் கோபத்துக்கும் திரு. பொன்னம்பலம் இராமநாதன் ஆளானார்.
பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை கேட்ட இலங்கைத் தேசியக் காங்கிரஸ் நிறுவனர் தலைவர் பொன்னம்பலம் அருணாசலத்துக்குச் சிங்கள புத்தரின் இனவொழிப்பு உள்நோக்கம் புரியவில்லை. சில ஆண்டுகளின் பின் அவரைத் தலைமைப் பதவியிலிருந்து சிங்களவர் விடுவித்தபொழுதே ஓரளவு உணர்ந்தார்.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என முழங்கி, தமிழ் மக்களின் உணர்வு வேகத்தில் 1947 தேர்தலில் வாக்குகளைப் பெற்ற அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸ் தலைவர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம், மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்க 1948இன் முதலாவது சட்ட மூலத்துக்கு எதிராகவே வாக்களித்தார். பின்னர் சிங்களவரின் வலைக்குள் வீழ்ந்து 1949இன் இலங்கைக் குடியுரிமை தொடர்பான துணைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். சிங்கள புத்த மேலாதிக்க உள்நோக்கத்தை திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் புரிந்து கொள்ளவில்லை. உடன்பிறப்புகளான மலையகத் தமிழரின் சினத்துக்கு ஆளானார்.
திரு. சி. சுந்தரலிங்கம், திரு. சிற்றம்பலம் போன்ற தமிழ்த் தலைவர்களும் திரு. சேனநாயக்கா அரசுக்கு ஆதரவாக இருந்தனர். சிங்கள புத்த மேலாதிக்க உள்நோக்கத்தை திரு. சி. சுந்தரலிங்கம், திரு. சிற்றம்பலம் ஆகியோரும் புரிந்து கொள்ளவில்லை. மலையகத் தமிழரின் வெறுப்புக்குள்ளான தமிழ்த் தலைவர்களுள் இவர்களும் அடங்குவர்.
சிங்கள புத்தரின் இனவொழிப்புக் கண்ணோட்டத்தைப் புரிந்து கொண்ட தமிழ்த் தலைவர்கள் 1949இல் மாவிட்டபுரத்தில் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். அந்த முயற்சியில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் திரு. கு. வன்னியசிங்கம்.
1949 திசம்பர் 15ஆம் நாள் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் நிறைவற்றியதீர்மானம் பினவரும் கருத்துகளை உள்ளடக்கியது.
சிங்களவர் நிலப்பகுதியில் சிங்கள ஆட்சி, தமிழர் நிலப்பகுதியில் தமிழர் ஆட்சி, இரு அரசுகளும் இணைந்த நடுவண் அரசாகக் கூட்டாட்சி. இலங்கையின் இரு மொழிவழி இனங்களும் ஒரே நாடாக வாழ்வதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு இது.
இந்தக் கூட்டாட்சி ஏற்பாட்டுக்குச் சிங்களவர் ஒத்துழைக்காவிடில், சிங்களவருக்கும் தமிழருக்கும் தனித்தனி நாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது.
இவ்வாறான தொலைநோக்குக் கொள்கையை, அன்பு, அறம், மனித நேயம், இரக்கம் சார்ந்த அரசியல் கொள்கையை விட்டுச் சென்றவர் திரு. கு. வன்னியசிங்கம். 400 ஆண்டு கால அடிமை வாழ்வுக்கு விடிவு காண விரும்பிய தமிழர் திரு. கு. வன்னியசிங்கம். சிங்கள புத்த மக்களுடன் சமாதானமாக வாழ விரும்பியவர் திரு. கு. வன்னியசிங்கம்.
முகமதியர், கிறித்தவர், மலையகத்தார், வன்னியார், மட்டக்களப்பார், யாழ்ப்பாணத்தார் என அனைவரையும் தமிழ்ப்பேசும் மக்களாகக் கண்டவர் திரு. கு. வன்னியசிங்கம். வட்டாரப் பகைமைகளைப் போக்கி, இனப் பகைமைகளைப் போக்கி, மனித நேயத்தை வளர்த்து, மனித நாகரிக வளர்ச்சிக்கான நெஞ்சார்ந்த விழைவுகளுடன் வாழ்ந்த திரு. கு. வன்னிசிங்கம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.