முனைவர் வா. செ. குழந்தைசாமி
மறவன்புலவு
திரு. க. சச்சிதானந்தன் அவர்களை நீண்ட நாட்களாக
அறிவேன். எனினும் நெருக்கமாக அறிந்தவன் அல்லன். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்தில்
படித்துத் தமிழிலும் அறிவியல் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
அமைதியானவராகவும் ஈழத் தமிழர்களின் ஆய்ந்து அவிந்த பிரதிநிதியாகவும்
பேச்சிலும்,
நடை உடை பாவனைகளிலும் கண்ணியமே உருப்பெற்று காட்சியளிப்பவர்.
கல்வியறிவு
தேடுதல் தொடர்பான பணிகளில் ஆழ்ந்த பற்றுடையவர். 70 தாண்டிய இந்த வயதிலும் ஆய்வியல்
நிறைஞர் பட்டத்திற்காக ஆய்வு செய்துகொண்டிருக்கிறார் என்பதே அவருடைய கல்வியறிவுத்
தாகத்தை விளக்கும். பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடல் தொழில் துறையில் ஆய்வு
அலுவலராகவும் பணிபுரிந்தவர். 23 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் சார்பில் உணவு வேளாண்
நிறுவன ஆலோசகராகப் பணிபுரிந்தவர்.
அவருடைய
காந்தளகம் பதிப்பகம் சிறப்பானது.
சேர்த்து வைக்க வேண்டிய நூல்களை வெளியிடுவது. இணையத்
தளத்தில் 50
ஆயிரத்திற்கு மேலான தலைப்புகளைத் தரும் வளம்
நிறைந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய பாரம்பரியத்தில் வந்த மறவன்புலவு
அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லைகள் கடந்து, பூமிப் பந்திடை உள்ள நாடுகள் பலவினும் பரவி, புவனமும் தமிழருக்குப் பொது என்ற தத்துவத்தோடு
70க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கட்கு,
அவர்கள் பண்பாட்டோடு, இலக்கியத்தோடு தொடர்பு கொண்டு வாழும் வகையில்
அவருடைய காந்தளகம் நிறுவனம் துணை செய்கிறது.
பதிப்பிற்கும்
தமிழ் மொழி ஈடுபாட்டிற்கும் பல பரிசுகளைப் பெற்றவர். தருமை ஆதீனத்தின் 18,750
பக்கங்கள் கொண்ட பன்னிரு திருமுறைத் தொகுதிகளை மூலமும் உரையுமாக 16 தொகுதிகளில்
அச்சிடும் நிலைக்குத் தயாரித்தது அவரது பகீரதத் தமிழ்த் தொண்டு முயற்சிக்கு ஓர்
எடுத்துக்காட்டு.
தமிழின், தமிழரின் தற்கால, எதிர்கால உயர்வுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். யாழ்பாணத் தமிழர்களின் போர் 20-21ஆவது
நூற்றாண்டுகளில் நடந்து எதிர் விளைவோடு முடிந்த குருட்சேத்திரம். பாண்டவர்கள்
பக்கத்தில் பீமனின் கதாயுதம் இருந்தது. அர்ஜூனனின் அம்பும் வில்லும் இருந்தன.
தருமனின் நியாயமும் இருந்தது. ஆனால் கிருஷ்ணனின் தந்திரம் இல்லை. எனவே அது
தற்காலிகமாகத் தோல்வி கண்டுள்ளது. கட்டுண்டார்கள் பொறுத்திருப்பதைத் தவிர வேறு
வழியில்லை. தாமதித்தாலும் தருமம் வெல்லும் என்பதில் அசையாத நம்பிக்கையுடையவன்
நான். நண்பர் மறவன்புலவு அவர்கட்குப் பல்லாண்டு
பல்லாண்டு கூறும் இந்த நேரத்தில் தம்மையே நம்பித் தலைநிமிர்ந்த தமிழினம் பெற
வேண்டிய உரிமையையும் உயர்வையும் இன்றில்லை எனினும் நாளை பெறும் எனும்
நம்பிக்கையோடு மறவன்புலவு அவர்கட்கு வாழ்த்துச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
No comments:
Post a Comment