முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

மக்களுக்கான இனிய தமிழ் நடை தந்த மு. வ.


மக்களுக்கான இனிய தமிழ் நடை தந்த மு. .
மறவன்புலவு க. சச்சிதான்தன்,
(மேனாள் ஆலோசகர், . நா.)
ஆழிப் பேரலையாய் மேனாட்டுப் படையெடுப்பு. பண்பாட்டுச் சிதைவின் தொடக்கம். போற்றுதலுக்குரியன பிசாசுகளாயின. மண் வாசனைகள் மலடாயின. மதிப்புக்குரியன மிதிக்கப்பட்டன.
அடிமைப்பட்ட மக்கள், பூமிப் பரப்பெங்கும் தத்தம் பண்பாடுகளுக்கு அரண் அமைத்த காலம். சிதைந்தன போக எஞ்சியன காக்கும் முயற்சிக்கான முன்னோடிகள் எழுந்த காலம்.
இந்தியாவில் இராசா இராம் மோகன்ராய் (Raja Ram Mohan Ray, 1775-1833), ஈசுவர சந்திர பந்தோபத்தியாயா (Iswara Chandra Bandopathyaya, 1820-1891), இலங்கையில் அனாகரீக தருமபாலர் (Anakarika Dharmapala, 1864-1933), யப்பானில் மத்தசுகாத்தா மசாயோசி (Matsukata Masayoji, 1835-1924), இத்தோ இரோபாமி, (Ito Hirobami, 1841-1909), சீனாவில் காங்கு யூவை (Kang Ywwei, 1858-1927) என்பாரின் பணிகள் பெருகிய காலம்.
கூர்மையடைந்த தத்தம் பண்பாட்டுக் கூறுகள், மேனாட்டுப் படையெடுப்பால் சிதையாமலிருக்க இப்பெருமக்கள் போன்றோர் உலகெங்கும் போராடிக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் தமிழர்களிடையே வாழ்ந்து தமிழ்மொழியையும் பண்பாட்டையும் சிதையாது காக்க முனைந்த போராளிகள் ஆறுமுக நாவலர் (1822-1879), அருளாளர் இராமலிங்க வள்ளலார் போன்றோர்.
அந்தத் தலைமுறை அரண் அமைத்துக் கட்டிக் காத்த பண்பாட்டுக் கூறுகளின் வலிமையை அடித்தள மக்களிடம் கொண்டு சென்று, தன்னம்பிக்கையை ஊட்டி, சமூக ஆளுமையை வேரூன்றிய சிறப்பு அடுத்த தலைமுறையினருக்காயிற்று.
வட இந்தியாவில் விவேகானந்தர், தாகூர் போன்றோர் பங்களித்தனர். தமிழகத்தில் மறைமலையடிகள், திரு. வி. கலியாணசுந்தரனார், விபுலானந்த அடிகள் போன்ற பலர் தம்மை ஈந்து தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தெடுத்தனர்.
வள்ளலாரின் தலைமுறை வரப்பு அரண் அமைத்தது. திரு. வி. . வின் தலைமுறை வேரூன்ற நீர் பாய்ச்சியது. துளிர்த்துப் பரவிப் பயனுறுத்தும் தமிழைத் தந்த அடுத்த தலைமுறையின் நாயகர் பலர். அவர்களுள் இந்த ஆண்டு நூற்றாண்டு காணும் மு. . குறிப்பிடத் தக்கவர்.
மூல நூல்களை அச்சிட்டுப் பதிப்பித்த காலம், அந்த நூல்களுள் புதைந்து புரிய முனைந்த காலம், புரிந்ததைப் பலருக்கும் விளக்கிய காலம், ஆக, இந்த மூன்று தலைமுறையினரின் காலங்கள்.
முந்தைய தலைமுறையினர், கீரையும் மயிருமாக இருந்த தமிழ்-வடமொழி மணிப்பிரவாள நடையைப் பிரித்தெடுப்பதிலேயே காலத்தைக் கழிக்க, தனித்தமிழ் நடையை எளிதாக்கி, மக்களிடம் எடுத்துச் சென்ற தலைமுறையின் பெருந்தகை மு. .
திருக்குறள் தெளிவுரை அவரின் தொடக்கப் பரிசோதனைகளுள் ஒன்று. அதுவே தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு இன்றும் முதுகெலும்பாக உள்ள பதிப்பு. இன்றுவரை வேறெந்தத் தலைப்பும் தாண்டமுடியாத எண்ணிக்கையில், மிகக் கூடுதலாக விற்பனையாகும் தமிழ்த் தலைப்பு. மக்கள் பயனுற வந்த உரை நடை.
மக்களிடையே செல்வாக்குப் பெற்ற மொழி நடையை, தனித் தமிழ் நடையை, இலக்கண வழுவற்ற நடையைமூன்று நான்கு சொற்களால் அமையும் வாக்கியங்களால் ஆன நடையை, ஆகக் குறைந்த எண்ணிக்கைச் சொல் வைப்பகத்தில் இருந்து எடுத்து ஆண்ட பெருமகனார் மு. .
மரபு சார்ந்த பத்தி இலக்கியம் ஒருபுறம், மாற்றாக எழுந்த கடவுள் மறுப்பு இலக்கியம் மறுபுறம், இரு பக்கமும் சாராமல், இரு சாராரையும் எதிர்க்காமல், தனக்கென  ஒழுக்கக் கொள்கை வகுத்து, அந்தக் கொள்கையாளராக வாழ்ந்து, அவ்வாறு வாழலாம் என்பதை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறும் படைப்புகளைத் தந்தவர் மு. .
திரு. வி. .வைத் தன் வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டவர். பிற்காலத்தில் அவர் பெயரில் கல்விக்கூடம் நிறுவியவர்.
சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் . . ஞானசம்பந்தன், . மு. பரமசிவானந்தம் போன்ற பத்திப் புலமையாளரும் . அன்பழகன் போன்ற கடவுள் மறுப்புப் புலமையாளரும் தமிழ்த்துறையின் ஒரே அறைக்குள் மு. .வுடன் பணியாற்றிய காலங்களில் அவர்களுக்கிடையே பனிப்போர் இல்லாப் பழகுநிலை இருந்தமை, மு. .வின் தலைமைக்கும் சான்றாண்மைக்குக் காட்டு.
இலக்கணம் கற்பது எளிதல்ல என்ற கருத்தோட்டத்தைக் களைய, தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வேட்டைத் தந்ததுடன் மொழியியலை எளிதாகப் புரிந்து கொள்ள ஆறு அரிய நூல்களைத் தந்தார்.
அயல்மொழி பல ஆழ்ந்து கற்றவர், ஆங்கிலத்தில் புலமையாளர், இந்திய மொழிகளுக்குப் பொதுவான வரிவடிவத்தைத் திணிக்கக் கூடிய சாத்தியக்கூறு வந்தபொழுது தமிழ் மொழியின் தனித்தன்மையை எடுத்துக்கூறி, பொது வரிவடிவத் திணிப்பை வன்மையாக எதிர்த்தவர்.
சங்க நூல்கள் கரடு முரடான மொழிநடை கொண்டன என்ற நிலயை மாற்றி, அவற்றுள் புதைந்த செவ்வியல் கூறுகளை வெளிக்கொணர்வதில் மு. . தலைமைப் பங்காற்றினார். சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பில் அன்னாரின் முனைவர் பட்ட ஆய்வேடு, காலம்காலமாக ஆய்வாளருக்குப் பயன்படும் களஞ்சியம். தமிழ் இலங்கியங்களில் உள்ள சுவையான பயன்தரும் செய்திகளை 24 நூல்களாக்கி மக்களிடையே பரப்பியவர் மு. .
 சங்க கால, பத்திக் கால, பிரபந்த கால இலக்கியங்கள், உரை எழுதுவதற்கு அப்பாலானவை, புணர்ச்சி விதிகள் மீறாது பதிப்பிக்க வேண்டியவை, விமர்சனங்களுக்கு அப்பாலானவை, போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் மட்டுமே உரியன என்ற மரபுசார் நிலையை மாற்றிய முன்னோடிகளுள் மு. . ஒருவர். சந்தி பிரித்துப் பொருள் விளங்கும் வடிவத்தில் தமிழ் இலக்கியங்கள் இவர் காலத்தில் பதிப்பாயின. ஒவ்வொரு நூற்பாவுக்கும் தனித்தனிக் கதைவழி விளக்கும் பாங்கும் இவர்கால முன்னெடுப்பே.
இலக்கிய விமர்சனம் பற்றிய தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மு. ., . . ஞா. ஆகியோரின் கருத்து நிலைகள் முந்தைய தலைமுறைகளின் மரபுக் கண்ணோட்டங்களை உடைத்தெறிந்தன. தமிழின் இலக்கிய வகைகள் பற்றிய புத்தாக்கங்கள் எழ வழிகாட்டின. மாணவர்களுக்கு இலக்கியக் கலையில் புதிய ஆய்வு நெறிகளை அறிமுகம் செய்த முன்னோடி மு. .
பிற மொழி இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியக் கூறுகளை ஒப்புநோக்கும் வழித்தடம் மு. . அமைத்துக் கொடுத்ததாகும். தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழி இலக்கியங்களைப் படிப்பதும் அவற்றின் செம்மாந்த நிலைகளுடன் தமிழ்க் கூறுகளை ஒப்பு நோக்கி ஆயும் பரப்பெல்லை விரிந்ததும் மு. . காலத்திலேயாகும்.
தன் ஆசான், திரு. வி. . வழியில் தன் இலங்கைப் பயணத்தை, யான் கண்ட இலங்கை என்ற தலைப்பில் நூலாக்கினார். சிறுவருக்கான 2 இலக்கிய நூல்களைத் தந்தார், வாழ்க்கை வரலாறு நூல்கள் 4 எழுதினார், தமிழ் இலக்கிய வரலாற்றைத் தொகுத்து நூலாக்கினார். அவரது புத்திலக்கிய வகையான கடித இலக்கியத்தை 4 நூல்களாக வடித்தார்.
தமிழிசை மீட்பு இயக்கத்தில் தன்னை இணைத்தார், தமிழ் இசைச் சங்கத்துடன் இணைந்தார். கல்கி, இராஜாஜி, அண்ணாமலை அரசர் போண்றோருடன் இணைந்து பங்காற்றினார். பண் ஆராய்ச்சி அரங்குகளை நடாத்தினார்.
நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. தன்னை வளர்த்த பச்சையப்பன் கல்லூரி நிறுவனர் பச்சையப்பர் பற்றிய நாடகம் எனத் தொடங்கி 6 நாடக நூல்களைத் தந்தார்.
செந்தாமரை என அவர் முதன்முதலாக எழுதிய புதினத்தை வெளியிடப் பதிப்பாளர் முன்வரவில்லை. தன் துணைவியாரின் நகைகளை ஈடுவைத்து அச்சிட்டு வெளியிட்டார். 14 புதினங்களை எழுதியமை அவரது தன்னம்பிக்கையின் பேறு. சாகித்திய விருதைப் பெற்றுத் தந்த புதினம், அகல் விளக்கு. தமிழக அரசு மற்றும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் விருதுகளையும் அவரது புதினங்கள் பெற்றன. ஆங்கிலம், இந்தி, உருசியன், கன்னடம், சிங்களம், தெலுங்கு, மராத்தி, மலையாளம் தெலுங்கு மலையாள ஆகிய மொழிகளுக்கும் அவரின் புதினங்கள் மொழிபெயர்ப்பாயின.
11-15% எழுத்தறிவு பெற்ற தமிழர் வாழ்ந்த காலத்தில் ஆசிரியப் பணியில் நுழைந்தார். ஒரு தலைமுறைக்கூடாக, 60-70% எழுத்தறிவு பெற்று உயரும் காலத்தில்  இவரது நூல்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றன. திருக்குறள் தெளிவுரையை மட்டும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டனர். இவர் எழுதிய ஏனைய 85 நூல்களையும் பாரி நிலையத்தினரே வெளியிட்டனர். பாரி நிலையம் செல்லப்பனின் அரும் பணியால் தமிழ் கூறும் நல்லுலகம் இவரின் ஆக்கங்களைத் தளர்வின்றிப் பயன்படுத்துகிறது.
 எழுத்தராக வாழ்க்கையை மு. . தொடங்கினார். ஆசிரியர், விரிவுரையாளர், கீழ்த்திசை மொழிகளின் பொறுப்பாளர், கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர், பல்கலைக் கழகத் துணை வேந்தர் எனப் படிப்படியாக உயர்ந்து பரந்த கல்விப் பணியாற்றினார்.
இராதா அம்மையாரை மணந்து பெற்ற மூவர் திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகியோர்.
1959ஆம் ஆண்டு வைகாசி மாதம், சென்னைக்கு உயர் கல்விக்காக வந்தேன். சென்னை, அமைந்தகரை, செல்லம்மாள் தெருவில் வாழ்ந்த மு. . அவர்கள் இல்லத்துக்கே முதலில் சென்றேன். அன்று தொடக்கம் அவருடன் தொடர்பாக இருந்தேன். பச்சையப்பன் கல்லூரியில் அவர் வகுப்பறையில் மாணவனானேன். அரசு, நம்பி, பாரி ஆகியோரின் அன்புக்கு உரியவனானேன்.

1968இல் சென்னையில் இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சிக்கு வந்தபொழுதும், 1971இல் மதுரையில் அவரைத் துணைவேந்தராகச் சந்தித்த பொழுதும் வாஞ்சையோடு என்னை வரவேற்றார்.
          வரலாற்று நாயகர் ஒருவரின் அரவணைப்பில் வாழ்ந்தமையும் அவரின் வகுப்பறையில் பயின்றாதலும் பேறுற்றேன். அவரின் நூல்களைப் பதிப்பித்த பாரி செல்லப்பனாரின் அனப்புக்குரியவனானேன் என்பதும் நான் பெற்ற பேறே. மு. . நூற்றாண்டையொட்டி இந்தக் குறிப்புகளைத் தருமாறு கேட்ட வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா மலராசிரியருக்கு நன்றி உடையேன்.

No comments:

Post a Comment