முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

தகவல் களஞ்சியத்தின் தலைமைச் செயலகம்


தகவல் களஞ்சியத்தின் தலைமைச் செயலகம்
மறவன்புலவு . சச்சிதானந்தன்
மேசைக் கணிணிகள் புழக்கத்துக்கு வந்த காலம். ஆப்பிள் நிறுவனம், ஐபிஎம் நிறுவனம் இரண்டும் மேசைக் கணிணிகளை விற்பனைக்கு விட்டிருந்தன. அந்தக் கணிணிகளின் படிமக் கணிணிகளைத் தாய்வான் குழுமங்கள் மலிவு விலையில் வழங்கிய காலம்.
1984இல் என்னிடம் அத்தகைய படிமக் கணிணி ஒன்றிருந்தது. அதில் பொருத்துவதற்காகத் தமிழ் எழுத்துருக்களைத் தேடினேன். சென்னைக்கு வந்தேன். தமிழில் எழுத்துருக்கள் உண்டா எனத் தேடினேன். தலைமைச் செயலகம் சென்றேன். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை நடராசனாரைச் சந்தித்தேன்.
சென்னை அண்ணா சாலையில், தேவி - திரை அரங்க வளாகத்தில் திருவள்ளுவர் எழுத்துரு விற்பனையாகும் திசி ஆலை அலுவலக முகவரியைத் தந்தார். தமிழில் கணிணி எழுத்துருக்களை முதலில் வணிகமயமாக்கியோர் தில்லியில் உள்ள திசி ஆலை நிறுவனத்தினர். தமிழக அரசுக்கு அந்த எழுத்துருக்களை விற்பனை செய்ததாக முனைவர் அவ்வை நடராசனார் கூறி என்னை அங்கு அனுப்பினார்.
  முனைவர் அவ்வை நடராசனாருடனான முதல் சந்திப்பில் அவருடைய உற்சாகமூட்டும் சொற்கள் என்னை ஈர்த்தன. விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். நினைவாற்றலுடன் துல்லியமாக எடுத்துக் கூறினார். தமிழ்ச் சொற்களைக் கனிந்து உச்சரித்தார். முன்பின் பழக்கமில்லாத என்னை, நீண்ட காலத் தோழமை உணர்வுடையவராகக் கருதினார், உதவினார், உபசரித்தார்.
2008ஆம் ஆண்டு. பன்னிரு திருமுறைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் எவராவது மொழிபெயர்த்துள்ளார்களா எனப் பலரிடம் உசாவி வந்தேன். தொலைப்பேசியில் முனைவர் அவ்வை நடராசரானாருடன் பேசுகையில் என் உசாவலைக் கூறினேன். கன்னியாகுமரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த முனைவர் நடராசன் திருமந்திரம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், திருக்கோவிலூர் மடத்தாரிடம் விசாரியுங்கள் என எனக்கு வழிகாட்டினார்.
கணிணி எழுத்துருவாயிலென், திருமந்திர மொழிபெயர்ப்பாயிலென், தகவல் களஞ்சியமாக முனைவர் அவ்வை நடராசனார் எனக்கு உதவினார். இன்றைக்கு நாம் தகவல்களை இணையத்தில் தேடுகிறோம். முனைவர் அவ்வை நடராசனாரோ நடமாடும் இணைய தளமாக நெடுங்காலமாகவே இயங்கிவந்துள்ளார்.
எனக்கு மட்டுமா? எத்தனையோ பேருக்கு அவரது நினைவாற்றலும் புலமையும் பொலிவான தமிழும் கைகொடுத்து வந்துள்ளன.
தகவல்களைத் தெரிந்துகொள்வதில் அவர் காட்டும் ஆர்வம் அதைவிட அதிகம்.
தமிழைச் செம்மொழியாக அறிவித்த காலத்தில் இரவு விருந்து ஒன்றில் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். ஏற்கனவே ஐந்து மொழிகளைச் செம்மொழிகளாக இந்திய அரசு ஏற்றுள்ளதையும் ஆண்டுதோறும் குடியரசு விழாவில் வாழ்நாள் பரிசு உள்ளிட்ட விருதுகளை, சமஸ்கிருதம், பிராகிருதம், பாளி, பாரசீகம், அரபு ஆகிய மொழிசார் புலமையாளருக்குச் செம்மொழி விருதுகளாக இந்திய அரசு வழங்கி வருவதையும், ஆட்சிமொழி, பிராந்திய மொழி, பின்தங்கிய மொழி, செம்மொழி என்ற வகைகளை இந்திய அரசின் நாடாளுமன்றமே ஏற்ற செய்திகளையும் சொன்னதும் ஆதாரங்கள் உண்டா எனக் கேட்டார்.
இரவு விருந்து முடிந்து, தியாகராயர் நகரில் உள்ள அவரது அலுவலகம் சென்று அவரது கணிணியில் இணைய தளங்களில் ஒவ்வொன்றாக அவற்றை வரிசையாக்கினேன். பள்ளி மாணவனின் ஆர்வம், கள ஆய்வாளனின் தகவல் தேடும் கூர்மை, தகவல்களை மனத்துள் வாங்கிப் பகுப்பாய்ந்து உடனுக்குடன் தன் நினைவில் இருந்தவற்றுடன் பொருத்தி நோக்கல், எந்தத் தகவல் எங்கே யாருக்குப் பயன்படும் என்ற கவனம் எனச் சில மணி நேரங்கள் அந்தத் தேடலில் அவர் திளைத்தார். சில பகுதிகளை அச்சானில் இடச் சொன்னார். எடுத்துச் சென்றார், இவற்றை இதுவரை எவரும் கண்டுகொள்ளவில்லையே என வருந்தினார்
 உரிய இடங்களில் அந்தத் தகவல்களைப் பரிமாறியமையால் இந்திய அரசின் செம்மொழித் தகைமை அறிவிப்புகளில் பிற்காலத்தில் மாற்றங்கள் வந்தன என அவரே என்னிடம் பின்னர் சொன்னார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக முனைவர் அவ்வை நடராசனார். 1995 தையில் எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு. தஞ்சாவூர் முழுவதும் விழாக்கோலம். தொடக்க நாளுக்கு முதல்நாள், மாலைப் பொழுது. என் பேராளர் பதிவைத் தேடி அலுவலகம் செல்கிறேன். பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
முனைவர் அவ்வை நடராசனார், முனைவர் சி. பாலசுப்பிரமணியனார், முனைவர் . இராஜாராம் ஆகியோர் வந்துகொண்டிருந்தனர். என் பின்னாலே இரு காவல்துறை அதிகாரிகள். பதிவுக்காகக் காத்திருக்கிறேன், என்னுடன் மகன் பிஞ்ஞகன்.
காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்தனர். அந்த அறையின் ஓரத்தில் அனைவரின் முன்பாக, நீங்கள் இங்கிருந்து நீங்கிவிடுங்கள் என்றனர். பேராளருக்கான என் விண்ணப்பம், செலுத்திய தொகைக்கான சிட்டை யாவும் காட்டினேன். எதிரே நின்றகொண்டிருந்த முனைவர் இராஜாராம் அவர்களைச் சுட்டினேன். அவருக்கு நேரடியாக விவரம் தெரியும் என்றேன். நீங்கள் போய்விடுவதே நல்லது என்றனர் காவல்துறையினர்.
முனைவர் அவ்வை நடராசனார், முனைவர் சி. பாலசுப்பிரமணியனார் இருவரும் என்னிடம் வந்தனர், மாநாட்டைச் சிறப்பாக நடத்தவேண்டும், காவல்துறையுடன் ஒத்துழையுங்கள் என்றனர். அப்பொழுது முனைவர் அவ்வை நடராசனாரின் முகத்தில் கண்ணீர் வழிந்ததைக் கண்டேன். அந்த இடத்தை விட்டு உடன் நீங்கினேன். எனக்கு மட்டுமல்ல, எனக்குப் பின்னர் அடுத்த நாள் பேராசிரியர்கள் சிவத்தம்பி, சண்முகதாஸ், மனோன்மனி என மேலும் சிலருக்கு இந்த நிலை. முனைவர் அவ்வை நடராசனார் கையறுநிலையில் இருந்தார், கண்ணீர் விட்டார், நிச்சயமாகத் தன் அறைக்குள் சென்றபின் கதறி அழுதிருப்பார்.
ஈழத் தமிழரின் சைவத் தமிழ்ப் பற்றை விளக்கச் சுவையான நிகழ்வைப் புனைந்து மேடைகளில் முனைவர் அவ்வை நடராசனார் கூறுவார். ஈழத்தமிழர் ஒருவர் இவரின் வீட்டுக்கு வந்தாராம். இவர் குளியலறையில் இருந்தாராம். வந்தவரை மகன் இருக்கச் சொன்னாராம். தம்பி தேவாரப் புத்தகம் இருக்கிறதா என ஈழத்தமிழர் மகனிடம் கேட்டாராம். தேவாரம் ஓய்வுபெற்றுப் பல மாதங்கள் ஆகிவிட்டதே என மகன் சொன்னாராம். தேவாரம் காவல்துறை அதிகாரியாக இருந்தவர்
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நாவன்மையாளர்களுள் முனைவர் அவ்வை நடராசனார் ஒருவர். கேட்டார்ப் பிணிக்கும் தகவாகப் பேசுவார். அவருக்கு மாலைப் பொழுது மேடைகளே காப்பரண்கள், அவையே அவர் உடல் நலத்தின் காப்பரண்களுமாம். அவர் தலைமையில் பேச எனக்கும் ஓரிரு வாய்ப்புகள் கிடைத்ததால் மகிழ்ந்திருக்கிறேன்.
ஆகா, உங்கள் காட்சி விளக்கம் மிக அருமையாக இருந்ததாமே! சேதுக் கால்வாய் பற்றி இப்படி ஒரு பார்வையா? இவ்வாறு ஒருநாள் முனைவர் அவ்வை நடராசனார் என்னைப் பாராட்டினார். இவர் அங்கு வரவில்லையே! என நான் ஐயுற்றிருந்தபொழுது, என் மகன் அருள் என்னிடம் கூறினார், தமிழ் ஊடகப் பேரவையில் உங்களது காட்சி விளக்கத்தை அவர்தான் ஏற்பாடு செய்தார், வீட்டுக்கு வந்ததும் அப்படிப் பாராட்டினார், நான் வரமுடியவில்லையே என வருந்தினேன் என்றார்.
பேரறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளையை நேரில் அறியும் வாய்ப்புப் பெற்றிலேன். எனினும் அன்னாரின் மகன், மருமகள், பெயரர்களை அறியும் வாய்ப்புப் பெற்றேன். மெய்வழி ஆண்டவர் சார்ந்த மருமகளைப் பெற்ற திருமண விழாவுக்கு முனைவர் அவ்வை நடராசனார் என்னை அழைத்திருந்தார். மருத்துவரான தன் மற்றொரு மகன் ஆஸ்திரேலியாவில் பணி தேடும் காலத்தில் அவரை என்னிடம் அனுப்பி ஆலோசனை கேட்பித்தார். அவரின் மக்களும் அவரைப் போலவே புலமை, ஆற்றல், செம்மாந்த நோக்கு, பண்பட்ட நெஞ்சம், பாராட்டும் பண்பு, கனிவான கண்ணோாட்டம் கொண்டவர்கள். என் உரையைக் கேட்பதற்காகவே வந்ததாக ஒருநாள் அவரின் துணைவியார் மருத்துவர் தாரா நடராசன் என்னிடம் கூறியபொழுது நான் வெற்றுப் பாராட்டாகக் கொள்ளவில்லை. கொல்லன்தெருவில் வாழ்பவர், ஊசியின் தரத்தை அறியதவாரா?  
முனைவர் அவ்வை நடராசனாருக்கு இந்தியத் திருநாடே தாமரைத்திரு (பத்மசிறீ) விருது வழங்கிப் பாராட்டியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் விருது பெறும் காட்சியைப் பார்த்ததும் நானே அங்கிருப்பதுபோன்று மகிழ்ந்தேன். பல்லாண்டு உடல் நலத்தோடு வாழ்ந்து மேன்மேலும் தொண்டாற்றித் தமரெல்லாம் செழிக்குமாறு முனைவர் அவ்வை நடராசனார் வாழ்வாராக.

No comments:

Post a Comment